செய்திகள்

தேர்தல் முடிவுக்கு எதிராக வழக்கு- மாலத்தீவு முன்னாள் அதிபருக்கு எதிராக மக்கள் போராட்டம்

மாலத்தீவு தேர்தல் வெற்றியை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் முன்னாள் அதிபர் மனு செய்துள்ளதை அடுத்து அவருக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். #AbdullaYameen

மாலை மலர்

மாலத்தீவில் சமீபத்தில் அதிபர் தேர்தல் நடந்தது. அதில் போட்டியிட்ட அதிபர் அப்துல்லா யாமீன் தோல்வி அடைந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் இப்ராகிம் முகமது சாலிக் வெற்றி பெற்றார்.

அதை யாமீன் ஏற்றுக் கொள்ளவில்லை. தேர்தலில் முறைகேடு நடத்தி வெற்றி பெற்றுள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதை மாலத்தீவு தேர்தல் கமி‌ஷன் மறுத்துள்ளது.

தேர்தல் சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடைபெற்றது. அதனால் 89.2 சதவீதம் ஓட்டுகள் பதிவானது என தெரிவித்துள்ளது. தேர்தலில் தோல்வி அடைந்ததன் மூலம் யாமீன் அதிபர் பதவியில் இருந்து விலக வேண்டும். புதிய அதிபர் இப்ராகிம் முகமது சாலிக் வருகிற நவம்பர் 17-ந்தேதி பதவி ஏற்க வழிவிட வேண்டும்.

அதற்கு மாறாக தேர்தல் வெற்றியை எதிர்த்து மாலத்தீவு சுப்ரீம் கோர்ட்டில் அவர் மனு செய்துள்ளார். அந்த மனு விசாரணைக்கு ஏற்கப்பட்டுள்ளது.