செய்திகள்

ஷரியத் நீதிமன்றங்கள் அமைக்க முயற்சிப்போரை கைது செய்ய வேண்டும் - சுப்பிரமணிய சுவாமி

ஷரியத் நீதிமன்றங்களை நிறுவ திட்டமிடுபவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என சுப்பிரமணியசுவாமி குறிப்பிட்டுள்ளார். #ShariatCourts #AIMPLB #SubramanianSwamy

லக்னோ:

நாட்டின் இஸ்லாமிய விவகாரங்கள் தொடர்பாக முடிவு எடுக்கும் உயர் அமைப்பான அனைத்து இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் மூத்த உறுப்பினர் ஜபர்யாப் ஜிலானி நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஷரியத் நீதிமன்றங்களை நிறுவ திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், இதற்கான செலவினங்கள் உள்ளிட்ட பல்வேறு நடைமுறை சாத்தியங்கள் குறித்து ஜூலை 15-ம் தேதி டெல்லியில் நடைபெறும் மேலிட கூட்டத்தில் விவாதித்து தீர்மானிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி, இந்தியாவில் ஒரே நாடு ஒரே சட்டம் தான் இருக்க வேண்டும் என்றும், ஷரியத் நீதிமன்றங்கள் அமைப்பது நாட்டில் பிரிவினையை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், அரசியலமைப்பு சட்டத்தில் இல்லாமல் வெளியில் இருந்து வரும் எதையும் ஏற்க முடியாது எனவும் அப்போது அவர் கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய சுப்பிரமணிய சுவாமி, ஷரியத் நீதிமன்றங்கள் அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுப்பவர்கள் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். #ShariatCourts #AIMPLB #SubramanianSwamy

SCROLL FOR NEXT