பெண்ணாடம்:
திருச்சியிலிருந்து 45 பயணிகளை ஏற்றிக் கொண்டு இன்று காலை அரசு பஸ் ஒன்று கடலூர் நோக்கி புறப்பட்டது.
அந்த பஸ் இன்று மதியம் 11.20 மணியளவில் கடலூர் மாவட்டம் பெண்ணாடம் கிழக்கு வால்பட்டறை பஸ்நிறுத்தம் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது அந்த பகுதியில் முதியவர் ஒருவர் திடீரென சாலையை கடக்க முயன்றார்.
அந்த முதியவர் மீது பஸ் மோதாமல் இருக்க அரசு பஸ் டிரைவர் பஸ்சை திருப்பினார். அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த டிரான்ஸ்பார்மர் மீது மோதியது. அப்போது டிரான்பார்மரிலிருந்து தீப்பொறிகள் விழுந்தன.
இந்த விபத்தில் அரசு பஸ்சின் முன்பக்க கண்ணாடி முற்றிலும் நொறுங்கி சேதமடைந்தது.
இதில் அதிர்ச்சி அடைந்த பயணிகள் பஸ்சில் இருந்து அலறியடித்துக்கொண்டு கீழே இறங்கினர். இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
அரசு பஸ் மோதியதால் டிரான்ஸ்பார்மர் சேதமடைந்தது. இதனால் அந்த பகுதியில் மின்விநியோகம் பாதிக்கப்பட்டது. டிரான்ஸ்பார்மரை சீரமைக்கும் பணியில் மின்சார ஊழியர்கள் ஈடுபட்டனர்.