ஸ்ரீநகர்:
ஜம்மு-காஷ்மீரில் மரணமடையும் தீவிரவாதிகள் நமது சகோதரர்கள் என சர்ச்சை கருத்து கூறிய ஆளும் கட்சி எம்.எல்.ஏ. மீது எப்.ஐ.ஆர். பதிவுசெய்ய வேண்டும் என பா.ஜ.க.வினர் வலியுறுத்தி உள்ளனர்.
காஷ்மீர் மாநிலத்தில் மக்கள் ஜனநாயக கட்சி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த கட்சியின் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் அஹமது பிர். சமீபத்தில் நிருபர்களிடம் பேசிய இவர், காஷ்மீரை சேர்ந்த தீவிரவாதிகள் வீரமரணம் அடைகின்றனர். அவர்கள் நமது சகோதரர்கள். இவர்களில் சிலர் சிறுவர்களாக உள்ளனர். தாங்கள் என்ன செய்கிறோம் என்பதுகூட தெரியாமல் உள்ளனர். தீவிரவாதிகள் கொல்லப்படுவதை நாம் கொண்டாடக் கூடாது. தீவிரவாதிகள் மரணமடையும் போதும் நாம் பரிதாபப்பட வேண்டும் என்றார்.
ஆளும் கட்சியுடன் கூட்டணி வைத்துள்ள பா.ஜ.க. உள்ளிட்ட பல கட்சிகள், அஹமதுவின் இந்த கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், ஆளும் கட்சி எம்.எல்.ஏ. மீது உடனடியாக எப்.ஐ.ஆர். பதிவுசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில பா.ஜ.க.வினர் வலியுறுத்தி உள்ளனர்.
இதுதொடர்பாக, மாநில பாஜக செய்தி தொடர்பாளர் சேதி கூறுகையில், தீவிரவாதிகளுக்கு ஆதரவாக பேசிய ஆளும் கட்சி எம்.எல்.ஏ.வின் கருத்து கண்டிக்கத்தக்கது. அவர்மீது உடனடியாக எப்.ஐ.ஆர். பதிவுசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.