கொல்கத்தா:
நாட்டிலேயே அதிக நாள் முதல்-மந்திரியாக இருந்தவர் என்ற பெருமையை மேற்கு வங்க மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு முதல்-மந்திரி ஜோதிபாசு பெற்றிருந்தார்.
அவர் 21-6-1977-ல் முதல்-மந்திரியாக பதவி யேற்று 6-11-2000 வரை அவர் அந்த பதவியில் இருந்தார். அதாவது 23 ஆண்டுகள் தொடர்ந்து முதல்-மந்திரியாக இருந்து வந்தார்.
இப்போது அவரது சாதனையை சிக்கிம் முதல்-மந்திரி பவன்குமார் சாம்லிங்க் முறியடித்துள்ளார். சிக்கிம் ஜனநாயக முன்னணி கட்சியின் தலைவரான இவர் 12-12-1994-ம் ஆண்டு முதல்-மந்திரியாக பதவியேற்றார். தொடர்ந்து 5 முறை வெற்றி பெற்று அவர் முதல்-மந்திரியாக நீடித்து வருகிறார்.
நேற்றுடன் அவர் முதல்- மந்திரியான 24-வது ஆண்டை கடந்துள்ளார். இதன் மூலம் நாட்டிலேயே அதிக நாள் முதல்-மந்திரியாக இருந்த பெருமையை பவன் குமார் சாம்லிங்க் பெற்றுள்ளார்.
இது சம்பந்தமாக பவன் குமார் சாம்லிங்க் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-
எனது தனி வாழ்க்கை ஒரு மைல் கல்லை தாண்டி இருக்கிறேன். இதில் என்னோடு பயணம் செய்தவர்களை நினைத்துப் பார்க்கிறேன். நான் இந்த சாதனையை அடைந்திருப்பதற்கு சிக்கிம் மாநில மக்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கை தான் காரணம். அவர்களுக்கு என் இதயபூர்வமான நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த நேரத்தில் நாட்டில் மிகச் சிறந்த தலைவர் ஜோதிபாசுவை நினைத்துப்பார்க்கிறேன். ஜோதிபாசுவின் சாதனையை கடந்து செல்லும் அதே நேரத்தில் அவருக்கு நான் உயர்ந்த மரியாதையை வழங்குகிறேன்.
இவ்வாறு கூறியுள்ளார்.
பவன்குமார் சாம்லிங்க்கு தற்போது 67 வயதாகிறது. எழுத்தாளர், இலக்கிய வாதியான அவர் 1982-ல் பஞ்சாயத்து தலைவராக தேர்வு செய்யப்பட்டார். 1985-ல் எம்.எல்.ஏ. ஆனார். 1989-ல் இருந்து 1992 வரை சிக்கிம் சங்கராம் பரிசத் கட்சியின் மந்திரியாக இருந்தார்.
1993-ல் சிக்கிம் ஜனநாயக முன்னணி என்ற கட்சியை தொடங்கினார். 1994 தேர்தலில் அவர் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தார். தொடர்ந்து 5 தடவை நடந்த தேர்தலிலும் அவரே வெற்றி பெற்று ஆட்சியில் இருந்து வருகிறார்.