புவனேஸ்வர்:
ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் அருகில் உள்ளது, பங்கிமுகன் கடற்கரை பகுதி. இந்த பகுதியில் கொட்டப்படும் குப்பைகள் காரணமாக இந்த பகுதி அதிக அளவில் மாசடைந்துள்ளது. இந்த பகுதியை சுத்தம் செய்ய வேண்டுமென கடந்த வருடம் மணல்சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் டுவிட்டர் மூலமாக ஒடிசா முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். உரிய நடவடிக்கை எடுக்கும்படி, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு முதல்வர் பட்நாயக் உத்தரவிட்டிருந்தார். ஆனாலும் முழுமையாக பணிகள் நடைபெறவில்லை.
இதையடுத்து, கடந்த 10-ம் தேதி சுதர்சன் பட்நாயக் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார். தொடர்ந்து உணவு அருந்தாமல் இருந்ததால் அவரது உடல்நிலை மோசமானது. எனவே 13-ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சையினால் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் அடைந்ததை அடுத்து நேற்று மருத்துவமனையில் இருந்து அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். நேற்று மாலை, பூரி கடற்கரையில் போராட்டத்தை தொடர்ந்துவரும் தனது ஆதரவாளர்களை சென்று சந்தித்த பட்நாயக், இன்று மறுபடியும் போராட்டத்தில் இணைந்தார்.
இந்த போராட்டம் காரணமாக கடற்கரையை சுத்தம் செய்யும் பணிகளை அரசு மீண்டும் தொடங்கியுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக அவர் கூறினார். இருப்பினும், இந்த சம்பவம் குறித்து அரசு முழுவீச்சில் நடவடிக்கை எடுத்து பணியை முடிக்கும் வரை போராட்டத்தை தொடர உள்ளதாகவும் அவர் கூறினார்.