செய்திகள்

பாதி வழியில் இறக்கி விட்டதால் பஸ் ஊழியர்களுடன் பயணிகள் வாக்குவாதம்

பெரம்பூர் பகுதியில் இயங்கி கொண்டிருந்த மாநகர பஸ்கள், வேலை நிறுத்த போராட்டம் தொடங்கிய தகவல் அறிந்ததும் பஸ்சில் இருந்த பயணிகளை பாதி வழியில் இறக்கி விட்டதால் பஸ் ஊழியர்களுடன் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மாலை மலர்

பெரம்பூர்:

அரசுடன் நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினார்கள். சென்னை பெரம்பூர் பகுதியில் இயங்கி கொண்டிருந்த மாநகர பஸ்கள், வேலை நிறுத்த போராட்டம் தொடங்கிய தகவல் அறிந்ததும் பஸ்சில் இருந்த பயணிகளை பெரம்பூர் பஸ் நிறுத்தத்தில் இறங்கி விட்டு, பஸ்சை ஓட்டேரியில் உள்ள தங்கள் பணிமனைக்கு கொண்டு சென்று விட்டனர்.

இவ்வாறு 10-க்கும் மேற்பட்ட பஸ்சில் இருந்த பயணிகள் பாதி வழியில் இறக்கி விடப்பட்டனர். இதனால் பஸ் ஊழியர்களுக்கும், பயணிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்து வந்த செம்பியம் போலீசார், பயணிகளை சமாதானம் செய்தனர். இதனால் பெண்கள் உள்பட ஏராளமான பயணிகள் தாங்கள் செல்ல வேண்டிய இடத்துக்கு செல்ல முடியாமல் பெரம்பூர் பஸ் நிறுத்தத்தில் பரிதவித்து நின்றனர்.

சிலர் ஆட்டோக்கள், ஷேர் ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் கொடுத்து ஏறிச்சென்றனர். ஆனால் பணம் இல்லாதவர்கள், பஸ்சில் ஒரு நாள் அனுமதி சீட்டு பெற்றவர்கள், மூத்த குடிமக்களுக்கான இலவச அனுமதி சீட்டு வைத்து இருந்தவர்கள் என பலர் ஆட்டோவில் கூடுதல் கட்டணம் கொடுக்க முடியாமல் அங்கே காத்து நின்றனர்.