புதுடெல்லி:
மும்பை பைகுல்லா பெண்கள் சிறையில் கடந்த ஜூன் மாதம் தீபா என்கிற மஞ்சுளா என்ற பெண் கைதி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரை சிறை அதிகாரிகள் அடித்து கொன்று விட்டதாக மற்ற பெண் கைதிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் அதிகாரி மற்றும் சிறை காவலர்கள் உள்பட 12 பேர் அதிரடியாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
இதற்கிடையில், சிறை அதிகாரிகள் பெண் கைதியை உடல் ரீதியாக சித்ரவதை செய்தது தெரியவந்தது. இந்த வழக்கில் திடீர் திருப்பமாக பெண் கைதியை தாக்கிய சிறை அதிகாரிகள் 6 பேர் மீது போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மும்பை பைகுல்லா சிறையில் நிலவும் சூல்நிலை குறித்து விசாரணை செய்ய 20 பெண் எம்.பி.க்கள் கொண்ட குழுவை பாராளுமன்றம் அமைத்தது. இக்குழு கடந்த ஜூன் மாதம் முதல் சிறையில் நடத்திய விசாரணையில் பைகுல்லா சிறையில் கைதிகள் மிகவும் மோசமான சூல்நிலையில் வாழ்வதாக கூறியுள்ளனர்.
கைதிகள் உறவினர்களை சந்திப்பதற்கு மறுப்பு தெரிவிக்கப்படுகிறது. கைதிகளுக்கு கொடுக்கப்படும் உணவு தரமற்றதாக உள்ளதாகவும், சிறையில் சுகாதாரமற்ற சூல்நிலை நிலவுவதாகவும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும், பெண் கைதி மரணம் குறித்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றுமாறு பெண் எம்.பி.க்கள் குழு அரசிற்கு பரிந்துரை செய்துள்ளது.