திமுக தலைவரும் தமிழக முன்னாள் முதல்வருமான கருணாநிதி நேற்று மாலை காலமானார். அவரது உடல் ராஜாஜி அரங்கத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடல் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா சமாதி அருகே அடக்கம் செய்யப்படுகிறது. கருணாநிதி மறைவுக்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். நேரில் வந்தும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பாராளுமன்றம் இன்று கூடியதும், இரு அவைகளிலும் கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு உறுப்பினர்கள் அஞ்சலி செலுத்தினர். மக்களவையில் அவைத்தலைவர் சுமித்ரா மகாஜனும், மாநிலங்களவையில் அவைத்தலைவர் வெங்கையா நாயுடுவும் இரங்கல் குறிப்பை வாசித்தனர். பின்னர் பாராளுமன்றத்தின் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.