செய்திகள்

ஹதியாவை சந்திக்க பெற்றோருக்கு மட்டுமே அனுமதி: சேலம் கல்லூரி முதல்வர்

மதம் மாறி திருமணம் செய்த கேரள மாணவி ஹதியாவை அவரது கணவர் சந்திக்க முடியாது எனவும், பெற்றோர்கள் மட்டுமே சந்திக்க முடியும் என்றும் அவர் படிக்கும் சேலம் கல்லூரி முதல்வர் பேட்டியளித்துள்ளார்.

சேலம்:

கட்டாய மதமாற்றத்தின் மூலம் திருமணம் செய்யப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் கேரளப் பெண் ஹதியா தொடர்ந்து படிக்கவும், சேலம் ஹோமியோபதி கல்லூரி டீனை அவரது பாதுகாவலராக நியமித்தும் சுப்ரீம் கோர்ட் நேற்று உத்தரவிட்டது.

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி சேலம் கல்லூரிக்கு ஹாதியா அழைத்து செல்லப்பட்டார். அவருக்கு தேவையான பாதுகாப்பு வழங்கப்படும் என தமிழக போலீஸ் அறிவித்து உள்ளது.

இந்நிலையில் சேலம் ஹோமியோபதி கல்லூரியின் முதல்வர் டாக்டர் ஜி கண்ணன் “ஹாதியாவின் கணவர் அவரை சந்திக்க அனுமதிக்கமாட்டேன், அவருடைய பெற்றோர்தான் கல்லூரியில் சேர்த்தனர். அவர்கள் மட்டுமே ஹாதியாவை சந்திக்க முடியும்.” என்று கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கல்லூரி விடுதியில் பிற மாணவிகளை போன்றே ஹாதியாவும் நடத்தப்படுவார். அவர் தனியாக எங்கும் செல்ல முடியாது, முன்கூட்டி அனுமதி பெறாமல் எதுவும் செய்ய முடியாது. எங்களுடைய ஆவணங்கள் அடிப்படையில் இப்போது ஹாதியா அகிலா அசோகன் தான். பெயரில் மாற்றம் வேண்டும் என்றால் அதற்கான நடைமுறைகள் மேற்கொள்ளப்படும். அவர் கல்லூரியில் மறுபடியும் சேர விரைவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.