ஆர்.கே.நகர் தொகுதியில் துணை ராணுவ வீரர்கள் கொடி அணிவகுப்பு நடத்தினார்கள். 
செய்திகள்

ஆர்.கே.நகர் தொகுதியில், இன்று துணை ராணுவம் கொடி அணிவகுப்பு

ஆர்.கே.நகர் தொகுதியில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிப்பதற்காக துணை ராணுவத்தினர் இன்று கொடி அணிவகுப்பு நடத்தினார்கள்.

ராயபுரம்:

ஆர்.கே.நகர் தொகுதியில் வருகிற 21-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் 15 கம்பெனி துணைராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

ஏற்கனவே 8 கம்பெனி துணை ராணுவத்தினர் ஆர்.கே.நகர் தொகுதிக்கு வந்தனர். இன்று 3 கம்பெனி ராணுவ வீரர்கள் வந்துள்ளனர். இன்னும் 4 கம்பெனி துணை ராணுவ வீரர்கள் விரைவில் வர உள்ளனர்.

ஆர்.கே.நகர் தொகுதியில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிப்பதற்காக துணை ராணுவத்தினர் இன்று கொடி அணிவகுப்பு நடத்தினார்கள். காசிமேடு மீன்பிடி துறைமுகம் காவல் நிலையம் அருகில் எண்ணூர் எக்ஸ்பிரஸ் சாலையில் இருந்து கொடி அணிவகுப்பு தொடங்கியது. ராயபுரம் போலீஸ் துணைகமி‌ஷனர் ரத்தினவேல், காசிமேடு மீன்பிடி துறைமுக போலீஸ் இன்ஸ்பெக்டர் சாம்வின்சென்ட் தலைமை தாங்கினார்கள்.

இதில் 200-க்கும் மேற்பட்ட துணை ராணுவ வீரர்கள் பங்கேற்றனர். அவர்கள் பல்லவன் நகர், திடீர் நகர், நாகூரான் தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் வீதிவீதியாக வந்தனர். பொதுமக்கள் அச்சப்படாமல் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காக அவர்கள் துப்பாக்கி ஏந்தியபடி நடந்து வந்தனர்.

SCROLL FOR NEXT