பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் கந்தம்பாளையம் மணியனூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 42). இவர் மணியனூரில் உள்ள அங்காளம்மன் மற்றும் மாசாணியம்மன் கோவிலில் பூசாரியாக பணியாற்றி வந்தார்.
இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் நேற்று மாலை கோவிலில் பூஜையை முடித்து விட்டு வீடு திரும்பினார். அப்போது திருச்செங்கோட்டில் இருந்து பரமத்திவேலூர் நோக்கி வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று ராஜேந்திரன் மீது வேகமாக வந்து மோதியது. விபத்தில் தூக்கிவீசப்பட்ட ராஜேந்திரனும், மோட்டார் சைக்கிளை ஓட்டிவந்த கந்தம்பாளையம் பகுதியைச் சேர்ந்த தினேஷ் படுகாயம் அடைந்தனர்.
உடனே அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து அவர்களை மீட்டு திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜேந்திரன் பரிதாபமாக இறந்தார். தினேசுக்கு ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து நல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews