பாப்பாரப்பட்டி:
கொரோனா ஊரடங்கு காலத்திற்கு ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ரூ.7,500 நிவாரணம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு
கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் பாப்பாரப்பட்டியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு வட்டார
செயலாளர் சின்னசாமி தலைமை தாங்கினார். நிர்வாகி சக்திவேல் முன்னிலை வகித்தார். வட்டார குழு உறுப்பினர்கள் ராஜாமணி, லோகு,
சிலம்பரசன், முகிலன், அன்பரசு, சண்முகம் மற்றும் கிளை செயலாளர்கள், கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி
பேசினார்கள். ஊரக வேலை உறுதி திட்டத்தில் ஆண்டுக்கு 200 நாட்கள் வேலை வழங்க வேண்டும்.
பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கும் நடவடிக்கையை மத்திய அரசு கைவிட வேண்டும். சிறு, குறு தொழிற்சாலைகளுக்கு ஊக்கத்தொகை அளிக்க வேண்டும். தொழிலாளர் நல சட்டங்களை திருத்தக்கூடாது என்பவை உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதேகோரிக்கையை வலியுறுத்தி ஒன்னப்பகவுண்டனஅள்ளி, சிட்லகாரம்பட்டி, அம்பேத்கர் நகர், பெரியூர், காந்திபுரம், பாரதிபுரம் ஆகிய இடங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.