பாபநாசம்:
தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன் உத்தரவின் பேரில் பாபநாசம் போலீஸ் துணை கண்காணிப்பாளர் நந்தகோபால் வழி காட்டுதலின் படி பாபநாசம் போலீஸ் குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், தலைமை காவலர் சம்பத்குமார், காவலர் விஜயகுமார் ஆகியோர் பாபநாசம் பகுதியில் கள்ளச்சாராய தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது பாபநாசம் -சாலியமங்கலம் சாலையில் அமைந்துள்ள கூனமடை வாய்க்கால் கருவக்காட்டு பகுதியில் கள்ளச்சாராயம் 5 பானை ஊறல் போட்டு பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
ரூ.4 லட்சம் மதிப்புள்ள 500 லிட்டர் கள்ளச்சாராய ஊறல் பானைகளை போலீசார் அழித்தனர். இதில் தொடர்புடைய பெருமாங்குடி வடக்கு தெரு சுரேஷ் (வயது 35) என்பவரை கைது செய்து வழக்கு பதிவு செய்து பாபநாசம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
மாஜிஸ்திரேட் சிவக்குமார் சுரேசை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். தலைமறைவான தஞ்சாவூர் கூடலூர் ஜெயக்குமார், பெருமாங்குடி பிரசாத் ஆகிய இருவரையும் தேடிவருகின்றனர்.