செய்திகள்

பனாமா பேப்பர் பட்டியலில் உள்ள இந்தியர்களிடம் மோடி அரசு விசாரணை நடத்த வேண்டும் - ஆம் ஆத்மி கோரிக்கை

பனாமா பேப்பர் பட்டியலில் உள்ள இந்தியர்கள் மீது பிரதமர் மோடி விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என ஆம் ஆத்மி கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

மாலை மலர்

பனாமா பேப்பர் லீக் மோசடி விவகாரத்தில் சிக்கிய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பதவியை அந்த நாட்டு நீதிமன்றம் பறித்தது. அவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டதையடுத்து நவாஸ் ஷெரீப் பதவி விலகினார்.

இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சி தலைவர் அசுதோஷ் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

பனாமா பேப்பர் மோசடியில் சிக்கிய பாகிஸ்தான் பிரதமரை அந்த நாட்டு நீதிமன்றம் தகுதிநீக்கம் செய்து உத்தரவிட்டது. இதனால் நவாஸ் ஷெரீப் பதவி விலக நேர்ந்தது.

இதேபோல், பனாமா பேப்பர் பட்டியலில் 474 இந்தியர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளது. இதில், சத்தீஸ்கர் முதல்-மந்திரி ராமன் சிங் மகன் கவுதம், வினோத் அதானி, அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய் பச்சன், கே.பி.சிங், அஜய் தேவ்கன் உள்ளிட்ட பலர் அடங்குவர்.

ஆனால் இவர்கள்மீது இன்றுவரை எந்த விசாரணையும் நடக்கவில்லை. எனவே மோடி தலைமையிலான அரசு இதுதொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்.

சி.பி.ஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை உள்ளிட்ட அரசு அமைப்புகளை எதிர்க்கட்சி தலைவர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கையில் கடந்த 3 ஆண்டுகளாக ஈடுபடுத்தப்பட்டு வருகிறது. ஆனால், பனாமா பேப்பர் மோசடி தொடர்பாக ஏன் கவனம் செலுத்தப்படவில்லை?