செய்திகள்

மாயமான மீனவர்களை மீட்க வலியுறுத்தி பாம்பன் ரெயில் நிலையத்தில் மீனவர்கள் முற்றுகை போராட்டம்

மாயமான மீனவர்களை மீட்க வலியுறுத்தி பாம்பன் ரெயில் நிலையத்தை மீனவர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராமேசுவரம்:

கன்னியாகுமரியில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்ற ஆயிரக்கணக்கான மீனவர்கள் ஒக்கி புயலால் பாதிக்கப்பட்டு இதுவரை கரை திரும்பவில்லை.

மாயமான மீனவர்களை மீட்க மத்திய-மாநிலஅரசுகள் தேடுதல் பணியை தீவிரப்படுத்த வேண்டும். கப்பல்கள், ஹெலிகாப்டர்கள் மூலம் தேடுதல் பணியை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி பாம்பன் மீனவர்கள் மற்றும் அரசியல் கட்சியினர், பொதுமக்கள் தேசிய நெடுஞ்சாலையில் திரண்டனர். அவர்கள் அங்கிருந்து ஊர்வலமாக பாம்பன் ரெயில் நிலையத்தை சென்றடைந்தனர். அங்கு ரெயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட னர்.

மீனவர்கள் போராட்டத்தையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ்மீனா உத்தரவின்பேரில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு இன்பமணி தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

முற்றுகை போராட்டம் காரணமாக ராமேசுவரத்தில் இருந்து சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் 10 நிமிடம் தாமதமாக புறப்பட்டு சென்றது.