செய்திகள்

பள்ளிகொண்டா-வாணியம்பாடியில் பைக் விபத்தில் 2 வாலிபர்கள் பலி

பள்ளிகொண்டா-வாணியம்பாடியில் பைக் விபத்தில் 2 வாலிபர்கள் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

அணைக்கட்டு:

பள்ளிகொண்டா அருகே உள்ள வெட்டுவாணம் மயில் தெருவை சோந்தவர் சக்கர வர்த்தி. இவரது மகன் சதீஷ்குமார் (வயது 30). சித்தூரில் உள்ள தனியார் கூரியர் கம்பெனியில் வேன் டிரைவராக வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில் தீபாவளி கொண்டாடுவதற்காக வெட்டுவாணத்திற்கு வந்த சதீஷ் குமார் இன்று காலை வேலைக்கு செல்வதற்காக பைக்கில் வேலூர் நோக்கி வந்து கொண்டிருந்தார்.

சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கிங்கினி அம்மன் கோவில் அருகே வந்தபோது எதிரே மணல் கடத்தி வந்த மாட்டு வண்டி மீது இவரது பைக் மோதியது.

இந்த விபத்தில் சதீஷ் குமார் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். விபத்துக்கு காரணமான மாட்டு வண்டி தொழிலாளி சதீஷ்குமாரின் உடலை சாலையோரம் வீசிவிட்டு மாட்டு வண்டியுடன் தப்பி சென்றுவிட்டார்.இதுப்பற்றி தகவல் கிடைத்ததும், பள்ளி கொண்டா சப்-இன்ஸ்பெக்டர்கள் கலைச்செல்வன், ஜெயமூர்த்தி மற்றும் போலீசார் விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விபத்துக்கு காரணமான மாட்டு வண்டி தொழிலாளியை தேடி வருகிறார்கள்.

வாணியம்பாடி அடுத்த மல்லகுண்டா தாசிரியப்பனூர் கிராமத்தை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 17). கல்லூரி மாணவர். இவர் நேற்று மாலை பைக்கில் மல்லகுண்டா நோக்கி சென்றார்.

அப்போது நாட்டறம்பள்ளியில் இருந்து மல்லகுண்டா நோக்கி வந்த தனியார் மினி பஸ் பைக் மீது மோதியது. இந்த விபத்தில் பிரகாஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து திம்மாம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.