செய்திகள்

பல்லடம் அருகே விபத்து- லாரி மோதி 2 வாலிபர்கள் பலி

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே லாரி மோதி 2 வாலிபர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

மாலை மலர்

பல்லடம்:

பல்லடம் அருகே உள்ள லட்சுமி மில் நேரு நகரை சேர்ந்தவர் ராமசாமி (21). டாடா ஏ.சி. டிரைவர். அதே பகுதியை சேர்ந்தவர்கள் கருப்புசாமி (23), அருணாசலம் (21). இவர்கள் 3 பேரும் நண்பர்கள்.

நேற்று இரவு இவர்கள் ஒரே மோட்டார் சைக்கிளில் பல்லடம் வந்தனர். பின்னர் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். கோவை - திருச்சி சாலையில் சாமிக் கவுண்டன் பாளையம் பிரிவில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது எதிரே சூலூரில் இருந்து கழிவு ஆயில் ஏற்றி கொண்டு மேட்டூருக்கு டேங்கர் லாரி வந்தது. இந்த லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். தலையில் பலத்த அடிபட்ட ராமசாமி, அருணாசலம் ஆகியோர் சம்பவ இடத்திலே பலியானார்கள். கருப்பு சாமிக்கு காயம் ஏற்பட்டது.

அவர் பல்லடம் அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை பெற்றார். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். லாரி மீது மோதுவதற்கு முன் மோட்டார் சைக்கிள் அந்த வழியாக ரோட்டில் நடந்து சென்றவர் மீது மோதியது.

இதில் அவர் காயம் அடைந்தார். மயங்கிய நிலையில் இருப்பதால் அவர் யார்? எந்த ஊர்? போன்ற விவரங்களை கண்டு பிடிக்க முடியவில்லை.

விபத்து குறித்து பல்லடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சாமிக்கவுண்டன் பாளையம் பிரிவில் அடிக்கடி விபத்து நடைபெறுகிறது. இதனை தடுக்க அங்கு டிவைடர் அல்லது ரவுண்டானா அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.