செய்திகள்

பாளை மத்திய ஜெயிலில் கைதி திடீர் மரணம்

பாளை மத்திய ஜெயிலில் சிவகிரியைச் சேர்ந்த கைதி திடீரென்று மரணமடைந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாலை மலர்

நெல்லை:

நெல்லை மாவட்டம் சிவகிரி அருகே உள்ள தேவிபட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன் (வயது 43), விவசாயி. இவருக்கும் அந்தப்பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும் ஏற்பட்ட மோதலில் கணேசன் மீது சிவகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு சிவகிரி போலீசார் கணேசனை கைது செய்து பாளை மத்திய ஜெயிலில் அடைத்தனர். கணேசனின் உறவினர்கள் அவரை ஜாமீனில் எடுக்க நடவடிக்கை எடுத்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று நள்ளிரவு ஜெயில் அறையில் கணேசனுக்கு திடீர் என்று நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக அவரை நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று அதிகாலை கணேசன் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதைத்தொடர்ந்து நெல்லை கோட்டாட்சி தலைவர் மைதிலி நேரில் சென்று உண்மையில் அவருக்கு நெஞ்சுவலி காரணமாக இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று விசாரணை நடத்தி வருகிறார்.