கள்ளச்சாராயம் 
செய்திகள்

கேரளாவில் கள்ளச்சாராயம் குடித்து 3 பேர் பலி

கேரளாவின் பாலக்காடு அருகே உள்ள காஞ்சிகோட் பழங்குடியினர் காலனியில் கள்ளச்சாராயம் குடித்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மாலை மலர்

பாலக்காடு:

கேரளாவின் பாலக்காடு அருகே உள்ள காஞ்சிகோட் பழங்குடியினர் காலனியை சேர்ந்த 3 பெண்கள் உள்பட 12 பேர் கள்ளச்சாராயம் குடித்துள்ளனர். இதில் அய்யப்பன் (வயது 52), ராமன் (52) ஆகியோர் நேற்றுமுன்தினம் உயிரிழந்தனர். உடனே 2 பேரது உடல்களும் புதைக்கப்பட்டது.

இந்தநிலையில் நேற்று காலை சிவன்(37) என்பவரும் வீட்டின் முன்பு இறந்து கிடந்தார். இந்த 3 பேருமே கள்ளச்சாராயம் குடித்தவர்கள் என்று கூறப்படுகிறது.

மேலும் 3 பெண்கள் உள்பட 9 பேரின் உடல்நிலையும் பாதிக்கப்பட்டது. உடனே அவர்களை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே இறந்த சிவனின் உடலும், புதைக்கப்பட்ட மற்ற 2 உடல்களையும் தோண்டி எடுத்து பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘12 பேரும் வெள்ளைநிறத்தில் ‘பினாயில்’ வாசனையுள்ள திரவத்தை குடித்துள்ளனர். பிரேதபரிசோதனை அறிக்கை வந்தபின்னரே முழு தகவலும் வெளிவரும்’ என்று கூறினர். இதற்கிடையே போதைக்காக மதுவுடன் எரிசாராயம் அல்லது சானிடைசரை கலந்து குடித்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.