செய்திகள்

மாதவிடாய் பிரச்சனையை அலசும் இந்தியப் படத்துக்கு பாகிஸ்தான் சென்சார் தடை

மாதவிடாய் காலத்தில் பெண்கள் சானிட்டிரி நாப்கின்களை பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் ‘பேட் மேன்’ என்ற இந்திய திரைப்படத்துக்கு பாகிஸ்தான் சென்சார் வாரியம் தடை விதித்துள்ளது. #PadMan #AkshayKumar

இஸ்லாமாபாத்:

நடிகர் அக்‌ஷய் குமார் நடிப்பில் உருவாகியிருக்கும் `பேட் மேன்' படம் கடந்த 9-2-2018 அன்று வெளியானது. பெண்கள் பயன்படுத்தும் சானிடரி நாப்கின் தொடர்பாக சமூகத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக உருவாகியுள்ள இந்தப் படம் உலகின் பல நாடுகளில் திரையிடப்பட்டுள்ளது.

குறைந்த விலையில் பெண்களுக்கு சானிடரி நாப்கினை தயாரித்துக் கொடுத்து, சிறந்த சமூக ஆர்வலராக வலம் வரும் கோயம்புத்தூரை சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தம் என்பவரின் வாழ்க்கையை மையப்படுத்தி இந்த படம் உருவாகி இருக்கிறது. டுவிங்கிள் கண்ணா தயாரிப்பில் ஆர்.பால்கி இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் அக்‌ஷய் குமாருடன் ராதிகா ஆப்தே, சோனம் கபூர், சுதீர் பாண்டே, மாயா அழக் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். 

இந்தப் படத்தை பாகிஸ்தானில் திரையிடக் கூடாது என அந்நாட்டின் மத்திய திரைப்பட சென்சார் வாரியம் தடை விதித்துள்ளது. நமது பாரம்பரியம் மற்றும் கலாசாரங்களுக்கு எதிரான திரைப்படங்களை நமது நாட்டை சேர்ந்த பட வினியோகஸ்தர்கள் இறக்குமதி செய்து திரையிடுவதை நாம் அனுமதிக்க முடியாது என மத்திய திரைப்பட சென்சார் வாரிய உறுப்பினர் இஷாக் அஹமத் குறிப்பிட்டுள்ளார். #PadMan #AkshayKumar

SCROLL FOR NEXT