இஸ்லாமாபாத்:
மரணதண்டனையை பாகிஸ்தான் அரசியல் ஆயுதமாக பயன்படுத்துவதாக, அந்நாட்டைச் சேர்ந்த மனித உரிமை ஆணையம் குற்றம் சாட்டியுள்ளது.
பாகிஸ்தானில் இயங்கி வரும் ஜஸ்டிஸ் ப்ராஜெக்ட் பாகிஸ்தான் (JJP) எனும் மனித உரிமை ஆணையம் மரண தண்டனை தொடர்பான அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், மரண தண்டனையை கையாள்வதில் பாகிஸ்தான் தோற்றுவிட்டதாகவும், அரசியல் ஆதாயத்துக்காகவே மரண தண்டனை ஒரு கருவியாக பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது.
மனித உரிமை ஆணையம் அளித்த அறிக்கையில் "டிசம்பர் 2014 முதல் மே 2017 வரை 465 நபர்கள் மீது குற்றம் சுமத்தி மரணதண்டனையை நிறைவேற்றியுள்ளனர். மேலும், நாட்டில் நடக்கும் குற்ற சம்பவம், தீவிரவாத செயல்களை குறைப்பதற்க்கு பதில் தண்டனைகளை அரசியல் கருவியாக பயன்படுத்துகிறார்கள்" என அறிக்கையில் குறிப்பிட்டிருந்தனர்.
டிசம்பர் 2014 பேஷ்வாரில் தாலிபன் இயக்கம் நடத்திய தாக்குதலில் 150 குழந்தைகள் பரிதாபமாக இறந்தனர். இச்சம்பவத்திற்க்கு முன்பு வரை பாகிஸ்தான் அரசு மரணதண்டனையை நிறைவேற்றுவதை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தது. இந்த கொடூர தாக்குதலுக்குப் பிறகு தண்டனையை நிறைவேற்றுவதில் அதிவேகம் காட்டி வருகிறது.
மரணதண்டனையை நிறைவேற்றுவதில் சீனா, ஈரான், சவுதி அரேபியா, ஈராக்கை தொடர்ந்து 5வது இடத்தில் பாகிஸ்தான் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.