செய்திகள்

புதிய மந்திரியை சரமாரியாக விமர்சித்து 730 நாட்கள் லீவு கேட்ட பாக். ரெயில்வே அதிகாரி

பாகிஸ்தானில் சமீபத்தில் பதவியேற்ற புதிய ரெயில்வே மந்திரி மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்து ரெயில்வே அதிகாரி ஒருவர் 730 நாட்கள் லீவு கேட்டு அனுப்பிய கடிதம் வைரலாக பரவிவருகிறது. #PakistanRailways

மாலை மலர்

இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானில் இம்ரான்கான் தலைமையிலான புதிய அரசு சமீபத்தில் பதவியேற்றது. ஷாகித் ரஷித் அஹ்மெத் ரெயில்வே துறை மந்திரியாக பொறுப்பேற்றுக்கொண்டார். இந்நிலையில், அந்நாட்டு ரெயில்வே அமைச்சகத்தில் தலைமை வணிக மேலாளராக உள்ள முகம்மது ஹானிப் குல் புதிய மந்திரி மீது குற்றம் சாட்டி 730 லீவு கேட்ட சம்பவம் இணையத்தில் வைரலாகியுள்ளது.

ரெயில்வே துறை செயலாளருக்கு ஹானிப் குல் எழுதியுள்ள கடிதத்தில் ‘புதிய மந்திரி துறை பற்றி எந்த விபரம் தெரியாதவராகவும், அநாகரிகமாக நடந்து கொள்வதால், பாகிஸ்தானின் குடிமைப்பணி அதிகாரியான என்னால் அவருக்கு கீழ் வேலை பார்க்க இயலாது. எனவே, எனக்கு 730 நாட்கள் விடுப்பு வழங்க வேண்டும்’ என கூறப்பட்டுள்ளது.

இந்த கடிதம் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன. எனினும், அவரது விண்ணப்பம் ஏற்கப்பட்டதா? என்ற விபரங்கள் வெளியாகவில்லை.