செய்திகள்

அமெரிக்க விமான நிலையத்தில் பாகிஸ்தான் பிரதமரிடம் சோதனை - அவமதித்ததாக புகார்

அமெரிக்க விமான நிலையத்தில் பாகிஸ்தான் பிரதமர் அப்பாசியை சாதரண பயணிகள் போன்று சோதனைக்குள்ளாக்கியது பாகிஸ்தானை அவமதிக்கும் செயல் என்று மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். #ShahidKhaqanAbbasi

மாலை மலர்

வாஷிங்டன்:

பாகிஸ்தான் பிரதமர் ஷாகித்கான் அப்பாசி கடந்த வாரம் அமெரிக்கா சென்றார். அங்குள்ள தனது தங்கையை பார்க்க தனிப்பட்ட முறையில் பயணம் மேற்கொண்டார்.

அதற்காக அவர் விமானம் மூலம் வாஷிங்டன் சென்றார். பாதுகாப்பு காரணம் கருதி மற்ற சாதாரண பயணிகள் போன்று அப்பாசியும் பரிசோதனைக்குள்ளாக்கப்பட்டார்.

இது பாகிஸ்தான் டி.வி.களில் வைரல் ஆக பரவி வருகிறது. வீடியோவில் அப்பாசி கையில் பேக் மற்றும் ‘நோட்’ தூக்கிக்கொண்டு பாதுகாப்பு வளையம் வழியாக செல்கிறார். கடந்த 2 நாட்களாக இது ஒளிபரப்பாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

பிரதமர் அப்பாசியை அமெரிக்க நிர்வாகம் சோதனை நடத்தியது பாகிஸ்தானை அவமதிக்கும் செயல். அவர் 22 கோடி பாகிஸ்தான் மக்களின் பிரதிநிதி. அவருக்கென்று மதிப்பு, மரியாதை உள்ளது.

பிரதமரான அப்பாசிக்கு ராஜ்ஜிய ரீதியிலான (டிப்ளமேடிக்) பாஸ்போர்ட் உள்ளது. அப்படி இருக்கும் போது பாதுகாப்பு காரணம் கருதி இவரிடம் சோதனை நடத்தியது பாகிஸ்தானை அவமதிக்கும் செயல் என மக்கள் கருத்து தெரிவித்தனர்.

இந்த நிலையில் அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் அப்பாசி அதிகாரப்பூர்வமற்ற முறையில் துணை அதிபர் மைக்பென்சை சந்தித்து பேசினார். பாகிஸ்தானில் தீவிரவாத குழுக்களுக்கு அரசு ஆதரவு அளிக்கிறது என ஏற்கனவே அவர் குற்றம் சாட்டியிருந்தார்.

தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் புகலிடம் அளிப்பதாக டிரம்ப் நிர்வாகம் புகார் கூறி வருகிறது. இதனால் பாகிஸ்தானியர்களுக்கு ‘விசா’ மற்றும் பல்வேறு தடைகள் விதிக்கவும் பரிசீலித்து வருகிறது.

அணு ஆயுத விற்பனையில் ஈடுபட்டதாக சமீபத்தில் 7 பாகிஸ்தான் நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது. இத்தகைய சூழ்நிலையில் அமெரிக்க விமான நிலையத்தில் பிரதமர் அப்பாசியிடம் சோதனை நடத்தியது பாகிஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #US #PakistanPM #ShahidKhaqanAbbasi