செய்திகள்

பயங்கரவாதி ஹபீஸ் சயீத் இயக்கத்தின் மீது நிரந்தர தடை விதிக்க பாக். திட்டமா?

பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தின் ஜமாத் உத்தவா இயக்கம் உள்ளிட்ட சில இயக்கங்கள் மீது நிரந்தர தடை விதிக்க பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மாலை மலர்

இஸ்லாமாபாத்:

மும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் ஜமாத் உத்தவா என்ற இயக்கத்தை நடத்தி வருகிறார். ஆப்கானிஸ்தானில் தாக்குதல்களை நடத்தும் ஹக்கானி பயங்கரவாத இயக்கம் உள்ளிட்ட பல இயக்கங்களுக்கு பாகிஸ்தான் புகலிடமாக இருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் சில மாதங்களுக்கு முன்னர் குற்றம் சாட்டியிருந்தார்.

இதே குற்றச்சாட்டை முன்வைத்து பாகிஸ்தானுக்கு வழங்கும் நிதியையும் அவர் நிறுத்தி வைத்தார். சர்வதேச அழுத்தம் காரணமாக பயங்கரவாத இயக்கம் மீது நடவடிக்கை எடுக்க பாகிஸ்தான் முன் வந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

1997-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை திருத்தி ஜமாத் உத்தவா உள்ளிட்ட பல இயக்கங்களை அந்த பட்டியலில் சேர்ப்பதற்கான வேலைகள் நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வரைவு சட்டம் தயாரிக்கப்பட்டு பாராளுமன்ற தேசிய சபையில் தாக்கல் செய்யப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. #TamilNews