செய்திகள்

வீட்டு வசதி வாரிய ஊழல் - பாக். முன்னாள் பிரதமர் தம்பிக்கு 10 நாள் விசாரணை காவல்

வீட்டு வசதி வாரியத்தில் ஒப்பந்தம் வழங்குவதில் ஊழல் செய்து பாகிஸ்தான் அரசுக்கு சுமார் 200 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்திய வழக்கில் ஷாபாஸ் ஷரிப் 10 நாள் விசாரணை காவலில் அடைக்கப்பட்டார். #Pakistanhousingscam #Shahbazsharif

மாலை மலர்

பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாண முதல் மந்திரியாக பதவி வகித்தவர் ஷாபாஸ் ஷரிப். பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிப் தம்பியான இவர், நவாஸ் ஷரிப் ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட பின்னர் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்(நவாஸ்) கட்சியின் தலைவராகவும், தற்போதைய பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவராகவும் பதவி வகித்து வருகிறார்.

பஞ்சாப் மாகாண முதல் மந்திரியாக பதவி வகித்தபோது ஷாபாஸ் ஷரிப்புக்கு பல ஊழல்களில் தொடர்பிருப்பதாக முன்னர் குற்றச்சாட்டு எழுந்தது.

குறிப்பாக, வீட்டு வசதி வாரியம் மூலமாக வீடுகளை கட்டித்தரும் 1400 கோடி ரூபாய் மதிப்பிலான ‘ஆஷியான் வீட்டுவசதி’ திட்டத்தில் ஏற்கனவே  ஒப்பந்தம் பெற்ற நிறுவனத்தை தனது அதிகாரத்தை பயன்படுத்தி ரத்து செய்ததாகவும் இதன்மூலம்  ஊழல் செய்து பாகிஸ்தான் அரசுக்கு சுமார் 200 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாகவும் அவருக்கு எதிராக பாகிஸ்தான் பொறுப்புடைமை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.