எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்துவதுடன், தீவிரவாதிகள் ஊடுருவலுக்கு துணை போகும் பாகிஸ்தான் ராணுவத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவம் நேற்று அதிரடி தாக்குதலை நடத்தியது. ஜம்மு காஷ்மீரின் நவ்ஷேரா செக்டாரில் நடத்திய தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவ முகாம் மற்றும் பதுங்கு குழிகள் தகர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இதனை பாகிஸ்தான் மறுத்துள்ள நிலையில், உலகின் மிக உயரமான போர்க்களம் என கருதப்படும் சியாச்சின் பனிச்சிகரம் அருகே இன்று காலை பாகிஸ்தான் விமானப்படை விமானம் பறந்ததாக பாகிஸ்தான் ஊடகங்களில் செய்தி வெளியானது. மேலும், பாகிஸ்தான் அனைத்து ராணுவ தளங்களையும் தயார் நிலையில் வைத்திருப்பதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஸ்கார்டுவில் உள்ள முன்கள விமான தளத்தில் விமானப்படை தளபதி சோகைல் அமான் ஆய்வு செய்தாகவும், அங்கிருந்து மிரேஜ் ரக போர் விமானத்தில் அவர் பயணித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.