செய்திகள்

தூதரக உறவு விரிசலுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண இந்தியா - பாகிஸ்தான் ஒப்புதல்

இந்திய தூதரகம் மற்றும் பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் அவமரியாதை செய்யப்பட்டதாக தொடரும் சர்ச்சை தொடர்பாக இந்தியாவும் பாகிஸ்தானும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண ஒப்புக்கொண்டுள்ளன.

இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானுக்கான இந்திய தூதரகம் புதுடெல்லியில் உள்ளது. சில வாரங்களுக்கு முன்னதாக பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளும் அவர்களது குடும்பத்தினரும் உளவியல் ரீதியிலான நெருக்கடியை சந்திப்பதாக மத்திய அரசு மீது பாகிஸ்தான் குற்றம் சாட்டியது.

இதேபோல, இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளும் பாகிஸ்தான் அரசு தங்களை உளவு பார்ப்பதாக குற்றம் சாட்டினர். இதனை அடுத்து, இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் சோஹைல் முகம்மது திடீரென இஸ்லாமாபாத் சென்றார். இதனால், அவரை பாகிஸ்தான் அரசு திரும்ப பெற்றுக்கொண்டதாக செய்திகள் வெளியாகின.

அந்த செய்தியை இந்திய வெளியுறவு அமைச்சகம் மறுத்தது. ‘வழக்கமாக இது போல தூதர்களை அந்தந்த நாட்டு அரசு அவ்வப்போது அழைத்து ஆலோசனை நடத்தும், இது வழக்கமான நடைமுறைதான். திரும்ப அழைக்கும் முடிவெல்லாம் இல்லை’ என விளக்கமளிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்திய தூதரகம் மற்றும் பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் அவமரியாதை செய்யப்பட்டதாக தொடரும் சர்ச்சை தொடர்பாக இந்தியாவும் பாகிஸ்தானும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண இன்று ஒப்புக்கொண்டுள்ளன.

இதுதொடர்பாக, பாகிஸ்தான் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘1992-ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட நன்னடத்தை நெறிமுறைகளின் அடிப்படையில் இந்தியா-பாகிஸ்தான் தூதர்களும், தூதரக அலுவலகங்களும் நடத்தப்படும் முறை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த இந்தியாவும் பாகிஸ்தானும் சம்மதித்துள்ளன’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்றதொரு அறிக்கையை டெல்லியில் உள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகமும் வெளியிட்டுள்ளது. #tamilnews

SCROLL FOR NEXT