செய்திகள்

பாகிஸ்தான் பாராளுமன்றத்துக்கு ஜூலை மாதம் தேர்தல்

பாகிஸ்தான் நாட்டின் பாராளுமன்றத்துக்கு வரும் ஜூலை மாதம் கடைசி வாரத்தில் பொதுத்தேர்தல் நடைபெறலாம் என அந்நாட்டின் பிரபல ஊடகம் தெரிவித்துள்ளது.

மாலை மலர்

இஸ்லாமாபாத்:

பாகிஸ்தான் நாட்டின் பாராளுமன்றத்தின் தற்போதைய பதவிக்காலம் வரும் 1-6-2018 அன்றுடன் முடிவடைகிறது. இந்த பதவிக்காலத்துக்கு இடையில் தேர்தல் தேதி அறிவிக்கப்படாத நிலையில், பதவிக்காலம் நிறைவடைந்த அறுபது நாட்களுக்குள் (1-8-2018) தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

தேர்தல் நடத்தப்படும் தேதியை அந்நாட்டின் தேர்தல் கமிஷனர் முடிவு செய்த பின்னர் பாகிஸ்தான் அதிபரோ, பிரதமரோ இதற்கான அறிவிப்பை வெளியிடுவது மரபாக இருந்து வருகிறது.

இந்நிலையில், வரும் ஜூலை மாதம் கடைசி வாரத்தில் பாராளுமன்றத்துக்கு பொதுத்தேர்தல் நடைபெறலாம் என அந்நாட்டின் பிரபல ஊடகம் தெரிவித்துள்ளது. அநேகமாக, ஜூலை 26, 28 அல்லது 29-ம் தேதி வாக்குப்பதிவுக்கான தேதியாக அறிவிக்கப்படலாம்.

ஜூலை 27-ம் தேதி வெள்ளிக்கிழமை என்பதால் அன்று தேர்தல் நடைபெற வாய்ப்புகள் குறைவு எனவும் அந்த ஊடகம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

342 இடங்களை கொண்ட பாகிஸ்தான் பாராளுமன்றத்தின் மக்களவையில் 272 இடங்கள் பொது தொகுதிகளாகவும், 60 இடங்கள் மகளிர் மட்டும் போட்டியிடும் தொகுதிகளாகவும், 10 இடங்கள் சிறுபான்மை இனத்தவர்களுக்கான தொகுதிகளாகவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய பாராளுமன்றத்தில் ஆளும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ் ஷரிப்) தலைமையிலான கூட்டணி கட்சிகளின் பலம் 199 ஆகவும், எதிர்க்கட்சிகளின் பலம் 137 ஆகவும் உள்ளது நினைவிருக்கலாம். #tamilnews