செய்திகள்

பிரதமர் மோடி மீது பாக். மந்திரி பாய்ச்சல் - ‘பயங்கரவாதி’ என வரம்பு மீறி விமர்சனம்

இந்தியாவின் பிரதமராக பயங்கரவாதி நரேந்திர மோடி ஆட்சி செய்கிறார் என பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி கவாஜா ஆசிப் கருத்து வெளியிட்டுள்ளார்.

மாலை மலர்

இஸ்லாமாபாத்:

மத்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ், நியூயார்க் நகரில் ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் சமீபத்தில் பேசியபோது பாகிஸ்தானை கடுமையாக சாடினார். அந்த நாடு, பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்து வருகிறது என அவர் கூறினார்.

அவர் அவ்வாறு கூறியதற்கு பதிலடி தருவதுபோல, பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி கவாஜா ஆசிப் கருத்து வெளியிட்டுள்ளார்.

அவர், ஜியோ டி.வி.யில் ‘டாக் ஷோ’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியபோது, “இந்த நேரத்தில் அங்கு (இந்தியா) ஒரு பயங்கரவாதி பிரதமராக உள்ளார். குஜராத்தில் அவரது கைகளில் முஸ்லிம்களின் ரத்தக்கறை படிந்தது. அவர்களை (இந்தியர்களை) ஒரு பயங்கரவாத கட்சி ஆள்கிறது. ஆர்.எஸ்.எஸ்.தான் அங்கு ஆட்சி நடத்துகிறது. பாரதீய ஜனதா கட்சி அதன் துணை அமைப்பு போன்றது” என்று வரம்பு மீறி விமர்சித்தார்.

அந்த நிகழ்ச்சியை நடத்திய ஹமித் மிர் ஒரு படி மேலேபோய், “ஆனால் நரேந்திர மோடி தேர்ந்தெடுக்கப்பட்ட பயங்கரவாதி” என கூறினார்.

இந்த விமர்சனங்களை பாரதீய ஜனதா கட்சி கண்டித்துள்ளது. அதன் செய்தி தொடர்பாளர் ஜி.வி.எல். நரசிம்மராவ் இது பற்றி கூறுகையில், “பயங்கரவாதிகள் முன் மண்டியிட்டுள்ள அதிகாரமற்ற அரசாங்கத்தில் வெளியுறவு மந்திரி ஒரு குள்ள அரசியல்வாதி. பாகிஸ்தானின் பயங்கரவாத முகத்தை உலக அரங்கில் ராஜ்ய ரீதியில் பிரதமர் மோடி வெற்றிகரமாக தோல் உரித்துக்காட்டியதால் ஏற்பட்ட ஏமாற்றத்தின் பிரதிபலிப்புத்தான் அவர் இப்படி பேசி உள்ளார்” என்று குறிப்பிட்டார்.