புவனேஸ்வரில் நடைபெற இருக்கும் ஆசிய தடகள சாம்பியன்ஷிப்ஸ் தொடரில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான் வீரர்கள் விசா பெற்றுள்ளனர்.
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள கலிங்கா மைதானத்தில் வருகிற 6-ந்தேதி முதல் 9-ந்தேதி வரை ஆசிய சாம்பியன்ஷிப்ஸ் தொடர் நடக்கிறது. இதில் பாகிஸ்தான் வீரர்கள் கலந்து கொள்கிறார்கள்.
அவர்களுக்கு இந்திய அரசு விசா கொடுப்பதில் தாமதம் ஏற்பட்டது. தற்போது பாகிஸ்தான் தடகள அணிக்கு விசா கொடுக்கப்பட்டுள்ளது. இவர்கள் இன்னும் இரண்டு மூன்று நாட்களில் இந்தியா வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தடகளத்தை தவிர மற்ற போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களுக்கு இன்னும் விசா வழங்கப்படவில்லை. எனவே அவர்கள் இந்த தொடரில் பங்கேற்பார்களா? என்பது சந்தேகமாகவே உள்ளது.
45 நாடுகளை சேர்ந்த சுமார் 800-க்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள். இந்தியா சார்பில் 95 பேர் கலந்து கொள்கிறார்கள். இந்தியா இதற்கு முன்பு டெல்லியில் 1989-ம் ஆண்டும், 2013-ல் புனேவிலும் இந்த தொடரை நடத்தியுள்ளது.