பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் 
செய்திகள்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மீது மேலும் 2 ஊழல் வழக்குகள்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மீது மேலும் 2 ஊழல் வழக்குகளை பதிவு செய்ய அந்த நாட்டு தேசிய பொறுப்புடைமை முகமை அனுமதி வழங்கி உள்ளது.

மாலை மலர்

இஸ்லாமாபாத்:

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் மீதான ஊழல் வழக்கில், அவருக்கு பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டு கடந்த 2018-ம் ஆண்டு 7 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தது. இதையடுத்து லாகூரில் உள்ள கோட்லாக்பாத் சிறையில் நவாஸ் ஷெரீப் அடைக்கப்பட்டார்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நவாஸ் ஷெரீப்பின் உடல்நிலை மோசமடைந்ததை தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக லண்டன் அனுப்பிவைக்கப்பட்டார். கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் லண்டன் ஆஸ்பத்திரியில் அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் நவாஸ் ஷெரீப் மீது மேலும் 2 ஊழல் வழக்குகளை பதிவு செய்ய அந்த நாட்டு தேசிய பொறுப்புடைமை முகமை அனுமதி வழங்கி உள்ளது. அதன்படி நவாஸ் ஷெரீப் அவரது சகோதரர் ஷாபஸ் ஷெரீப் மற்றும் நவாஸ் ஷெரீப்பின் மகள் மரியம் நவாஸ் உள்ளிட்ட 13 பேர் மீது பண மோசடி மற்றும் கணக்கில் காட்டப்படாத சொத்துகளை வைத்திருந்தது தொடர்பாக வழக்க தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தவிர நில அபகரிப்பு தொடர்பாக நவாஸ் ஷெரீப் மற்றும் ஜி.இ.ஓ. என்ற ஊடக அமைப்பின் தலைவர் மிர் ஷகில் குர் ரஹ்மான் ஆகியோர் மீது மற்றொரு ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட இருக்கிறது.