செய்திகள்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் 2 நாள் பயணமாக துருக்கி செல்கிறார்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இரண்டு நாள் பயணமாக துருக்கி செல்கிறார் என பாகிஸ்தான் வெளியுறவு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #ImranKhan #ImranKhanTurkeyvisit

மாலை மலர்

இஸ்லாமாபாத்:

வல்லரசு போட்டியில் முதலிடத்தை பிடிக்க முயன்றுவரும் சீனா இந்தியாவின் எதிரியான பாகிஸ்தான் மீது அளவுகடந்த பாசத்தை பொழிந்து வருகிறது.

பாகிஸ்தானில் குவாடார் உள்ளிட்ட துறைமுகங்களின் மேம்பாடு, உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைய நிதியுதவி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை சீனா செய்து வருகிறது.

தற்போது கடன் சுமை மற்றும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தான் அரசு சர்வதேச நிதியத்தின் உதவியை நாடியுள்ளது. அங்குள்ள நிலைமைகளை ஆய்வு செய்வதற்காக  சர்வதேச நிதியத்தின் அதிகாரிகள் பாகிஸ்தானுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, பாகிஸ்தான் பிரதமராக பொறுப்பேற்ற இம்ரான் கான், சீனா, மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து நிதி திரட்டி வருகிறார். 

இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இன்று துருக்கி செல்கிறார். துருக்கி அதிபரின் அழைப்பை ஏற்று பயணம் மேற்கொள்கிறார் என வெளியுறவு துறை தெரிவித்துள்ளது. துருக்கி அதிபர் தயீப் எர்டோகனை சந்தித்து ஆலோசனை நடத்தும் அவர், இரு நாட்டு உறவுகளை மேம்படுத்தும் வகையில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

பாகிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி ஷா மெஹ்முது குரேஷி, நிதி மந்திரி ஆசாது உமர் உள்ளிட்ட பலர் பிரதமருடன்  பயணம் செய்கின்றனர் எனவும் அந்நாட்டு வெளியுறவு துறை அதிகாரிகள் தெரிவித்தனர். #ImranKhan #ImranKhanTurkeyvisit