செய்திகள்

ஏரிக்கரையை உடைத்ததால் 400 ஏக்கர் நிலம் தண்ணீரில் மூழ்கியது

பொன்னேரி அருகே ஜேபிசி எந்திரம் மூலம் ஏரி கரையை உடைத்ததால் 400 ஏக்கர் நிலம் தண்ணீரில் மூழ்கியது.

பொன்னேரி:

பொன்னேரி அருகே உள்ள பி.என்.கண்டிகை ஏரி 50 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இங்கு சேமித்து வைக்கப்படும் தண்ணீர் மூலம் வெள்ளகுளம், சிறுளபாக்கம், திடீர் நகர், பி.என்.கண்டிகை உள்ளிட்ட பகுதிகளில் 500 ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வருகிறது.

கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் இந்த ஏரி முழுவதும் நிரம்பி இருந்தது. இந்த நிலையில் நேற்று இரவு மர்ம நபர்கள் ஜேசிபி எந்திரங்கள் மூலம் ஏரி கரையை உடைத்து விட்டனர்.

இதனால் வெளியே நீர் அருகில் உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்தது. 400 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள நெற் பயிர்கள் தண்ணீரில் மூழ்கின.

ஏரி கரையை உடைத்தவர்களை கைது செய்ய வேண்டும். மூழ்கிய நெற்பயிருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.