தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தூத்துக்குடி மக்கள் கடந்த 100 நாட்களாக தொடர்ந்து போராடி வருகின்றனர். போராட்டத்தின் 100-வது நாளான நேற்று ஆயிரக்கணக்கான மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி ஊர்வலமாக சென்றனர். அப்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் பொதுமக்களில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதற்கிடையே, அண்ணாநகர் பகுதியில் உள்ள மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை அருகே இன்று காலை போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மீண்டும் மோதல் வெடித்தது.
போலீசாரை நோக்கி பொதுமக்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். போலீசார் கண்ணீர் புகை வீசியும், ரப்பர் குண்டுகளை பயன்படுத்தி துப்பாக்கிகளால் சுட்டும் போராட்டக்காரர்களை விரட்டி அடித்தனர். நிலைமை எல்லைமீறி போனதால் போலீசார் இன்று நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காளியப்பன் என்ற 22 வயது வாலிபர் உயிரிழந்ததை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் பலியானோர் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.