புதுடெல்லி:
பரபரப்பான அரசியல் சூழலில் பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று கூடியது. வரும் 13-ம் தேதி வரை இந்த கூட்டத்தொடர் நடைபெறுகிறது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால், இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று உரை நிகழ்த்தினார்.
இன்று பாராளுமன்ற மக்களவையில் இடைக்கால பட்ஜெட்டை நிதி மந்திரி பொறுப்பு வகிக்கும் பியூஷ் கோயல் தாக்கல் செய்தார்.
இந்நிலையில், பாராளுமன்றத்தில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்து பியூஷ் கோயல் உரையாற்றியது தேர்தல் பிரச்சாரம் போல் இருந்ததாக மத்திய முன்னாள் மந்திரி ப.சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் கூறுகையில், இடைக்கால நிதி மந்திரி பியூஷ் கொயல் தாக்கல் செய்த பட்ஜெட்டின் மீது அவர் இன்று ஆற்றிய நீளமான உரை நமது பொறுமையை மிகவும் சோதித்து விட்டது.
இது இடைக்கால பட்ஜெட் அல்ல. பிரச்சார உரையுடன் முழு வீரியத்துடன் கூடிய முழு பட்ஜெட். தேர்தலில் வாக்குகளை கவரும் நோக்கத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்.
நாட்டில் ஏழைகளுக்கே முன்னுரிமை வேண்டும் என்ற காங்கிரஸ் கட்சியின் திட்டங்களை காப்பி அடித்த இடைக்கால நிதி மந்திரி பியூஷ் கோயலுக்கு நன்றி என குறிப்பிட்டுள்ளார். #Budget2019 #Congress #PChidambaram