செய்திகள்

கவுதமாலாவில் மக்கள் கூட்டத்தில் லாரி மோதிய விபத்தில் 30 பேர் பலி

கவுதமாலா நாட்டில் நகராட்சி அலுவலகம் அருகே திரண்டிருந்த மக்கள் கூட்டத்திற்குள் லாரி புகுந்து நசுக்கியதில், 30 பேர் பலியாகியுள்ளனர். 17 பேர் படுகாயமுற்றனர். #GuatemalaAccident

மாலை மலர்

கவுதமாலா சிட்டி:

மத்திய அமெரிக்க நாடானா கவுதமாலாவில் உள்ள நகுவாலா பகுதியில், நேற்றிரவு அதிவேகமாக வந்த லாரி ஒன்று திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டினை இழந்து மக்கள் கூட்டத்தில் புகுந்தது. நகராட்சி அலுவலகம் அருகே இந்த விபத்து நடந்தது. லாரியில் சிக்கிய பலர் உடல் உறுப்புகள் சிதைந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் சரிந்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் சுமார் 30 பேர் பலியாகினர்.  இந்த துயர சம்பவத்தில் 17 பேர் படுகாயமுற்றனர். உடனடியாக அவர்களை அருகிலிருந்த மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கவுதமாலாவின் அதிபர் ஜிம்மி மொரால்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘இந்த கோர சம்பவத்தை நினைத்து மிகவும் வருந்தினேன். இந்த விபத்தில் 30 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இவர்களின் குடும்பங்களுக்கு நாங்கள் தேவையான உதவிகள் செய்துக் கொண்டிருக்கிறோம்.  உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்’ என பதிவிட்டுள்ளார்.

இவ்விபத்திற்கு 3 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என கவுதமாலா அரசு கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. #GuatemalaAccident