கரூர்:
கரூர் அருகே உள்ள சின்னஆண்டாங்கோவில் பகுதியில் திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட குற்றசம்பவங்கள் அதிக அளவில் நடைபெற்றது.
இதனையடுத்து இந்த சம்பவங்களை தடுக்க புறக்காவல்நிலையம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
அதன்படிசின்னஆண்டாங்கோவில் ரோட்டில் புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டது.
சில மாதங்கள் மட்டுமே செயல்பட்ட அந்த புறக்காவல்நிலையம் தற்போது, பூட்டியே கிடக்கிறது. அங்கு போலீசார் யாரும் பணியமர்த்தப்படவில்லை.
இந்நிலையில் புறக்காவல்நிலையத்தின் ஜன்னல், கதவுகள் உடைக்கப்பட்டு அதனுள் குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளிட்ட பொருட்கள்
கொட்டப்பட்டு உள்ளதுடன் அதை சுற்றிலும் குப்பைகள் குவிந்து காணப்படுகிறது.
இதனால் கொசுக்கள் உற்பத்தி ஆவதுடன், இரவு நேரங்களில் சமூக விரோத செயல்களும் நடைபெற வாய்ப்புள்ளது. எனவே சம்பந்தப்பட்டவர்கள் புறக் காவல் நிலையத்தை சுத்தம் செய்து குப்பைகளை வெளியேற்றி மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் அல்லது அதனை நகராட்சியிடம் ஒப்படைத்து அதற்கு வாடகை நிர்ணயம் செய்து கடைகள் உள்ளிட்டவற்றிற்கு வாடகைக்கு விடலாம் என அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.