ஓஎஸ் வேலுச்சாமி 
செய்திகள்

ஓட்டப்பிடாரம் தொகுதி காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ ஓ.எஸ்.வேலுச்சாமி மரணம்

ஓட்டப்பிடாரம் தொகுதி காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. ஓ.எஸ்.வேலுச்சாமி காலமானார். அவரது உடலுக்கு அரசியல் கட்சி பிரமுகர்கள், பல்வேறு தரப்பினர் அஞ்சலி செலுத்தினர்.

மாலை மலர்

கோவில்பட்டி:

ஓட்டப்பிடாரம் சட்டசபை தொகுதி முன்னாள் உறுப்பினராக இருந்தவர் ஓ.எஸ்.வேலுச்சாமி. இவர் நேற்று காலமானார். அவருக்கு வயது 88. இவர் ஓட்டப்பிடாரம் தொகுதியில் 1977-ம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று 1980-ம் ஆண்டு வரை சட்டசபை உறுப்பினராக இருந்தார்.

பின்னர் அக்கட்சியில் இருந்து விலகி ஜி.கே.வாசன் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை தொடங்கியபோது அதில் ஓ.எஸ்.வேலுச்சாமி தன்னை இணைத்துக்கொண்டு பணியாற்றினார். மேலும், கோவில்பட்டி காந்தி மண்டபம் அறக்கட்டளையின் தலைவராகவும் இருந்து வந்தார். ஓ.எஸ்.வேலுச்சாமிக்கு ரஞ்சிதம்மாள் என்ற மனைவியும், சுந்தரம் என்ற மகனும், மகேஸ்வரி என்ற மகளும் உள்ளனர். கோவில்பட்டி ஜோதிநகர் முதல் தெருவில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ள ஓ.எஸ்.வேலுச்சாமியின் உடலுக்கு அரசியல் கட்சி பிரமுகர்கள், பல்வேறு தரப்பினர் அஞ்சலி செலுத்தினர்.