லக்னோ:
உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் காஸ்கஞ்ச் நகரில் ஏற்பட்ட கலவரத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட சந்தன்குப்தா கொலையில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகள் 2 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
உத்தரப்பிரதேசம் மாநிலம் காஸ்கஞ்ச் நகரில் குடியரசு தினத்தன்று விஷ்வ இந்து பரிஷத், ஏ.பி.வி.பி. உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து, ‘திரங்கா யாத்ரா’ என்ற பெயரில் இருசக்கர வாகனப் பேரணி நடத்தின. இந்த பேரணியின் மீது ஒருதரப்பினர், கற்களை வீசினர். பதிலுக்கு பேரணியில் சென்றவர்களும் கற்களை வீசித் தாக்க, சிலர் துப்பாக்கிகளை எடுத்துச் சரமாரியாக சுட்டனர்.
இந்த துப்பாக்கி சூட்டில் பேரணியில் வந்த சந்தன் குப்தா என்ற இளைஞர் கொல்லப்பட்டார். இதையடுத்து வன்முறை ஏற்பட்டதால் மாவட்ட போலீஸ் எஸ்.பி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இதற்கிடையே பேரணியில் துப்பாக்கிச் சூடு நடத்திய முக்கிய குற்றவாளி சலீம் என்பவரை போலீசார் கடந்த வாரம் கைது செய்தனர். மேலும், காஸ்கஞ்ச் கலவரத்தில் தொடர்புடைய சல்மான் என்பவரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.
இந்நிலையில், இந்த கலவரத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகளான சகோதரர்கள் நசீம் மற்றும் வசீம் ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்களிடம் இருந்து இரண்டு துப்பாக்கிகள் மற்றும் குண்டுகளை பறிமுதல் செய்தனர். இந்த கலவரம் தொடர்பாக் இதுவரை 19க்கு மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.