செய்திகள்

அசல் ஓட்டுநர் உரிமம் கட்டாயம்: தமிழக அரசுக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்

வாகன ஓட்டிகள் அசல் ஓட்டுநர் உரிமத்தை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை ஐகோர்ட் இன்று தள்ளுபடி செய்தது.

தமிழக்ததில் செப்டம்பர் 1-ந்தேதி முதல் வாகன ஓட்டிகள் அனைவரும் வாகனங்களை ஓட்டும்போது அசல் ஓட்டுனர் உரிமத்தை வைத்திருக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவு நடைமுறைக்கு வந்ததில் இருந்து, வாகன ஓட்டிகளை கண்காணிக்கும் பணியில் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

இந்த உத்தரவை எதிர்த்து அகில இந்திய சரக்கு வாகன உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.  அவர்கள் தாக்கல் செய்த மனுவில், "நீண்ட தூரப் பயணத்தின் போது வாகன ஓட்டுநர்களின் உடைமைகள் திருட்டுபோகவோ அல்லது தொலைந்து போகவோ வாய்ப்புள்ளது. இந்தச் சூழலில் அசல் உரிமம் இல்லை என்றால் அதன்மூலம் ஏராளமான சட்ட சிக்கல்கள் ஏற்படும். மேலும் வாகன உரிமையாளர்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு இடையே உள்ள ஒரே பிணைப்பு அசல் ஓட்டுநர் உரிமம் மட்டுமே. ஆகவே, அசல் ஓட்டுநர் உரிமம் கட்டாயம் என்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும்” என்று கோரியிருந்தனர்.

இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. வழக்கின் வாதப்பிரதிவாதங்கள் நிறைடைவந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்ப்ட்டிருந்தது.

இந்நிலையில், இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், அசல் ஓட்டுநர் உரிமம் கட்டாயம் என்ற அரசின் உத்தரவு செல்லும் என்று தெரிவித்தனர்.