செய்திகள்

ஒட்டன்சத்திரம் ஆரஞ்சு பழ குடோனில் பயங்கர தீ விபத்து

ஒட்டன்சத்திரம் பஸ் நிலையம் எதிரே ஆரஞ்சு பழ குடோனில் ஏற்பட்ட தீவிபத்தை 4 மணிநேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர்.

மாலை மலர்

ஒட்டன்சத்திரம்:

ஒட்டன்சத்திரம் பஸ்நிலையம் எதிரே தனியார் வணிகவளாக காம்ப்ளக்ஸ் உள்ளது. நேற்று மாலை ஆயுதபூஜைக்காக இங்குள்ள அலுவலகங்களில் பூஜை நடைபெற்றது. கீழ்தளத்தில் ஆரஞ்சு பழ குடோன் வைத்திருந்த நபர் பூஜையை முடித்துவிட்டு கதவை பூட்டி சென்றுவிட்டார்.

தீபத்தை அணைக்காமல் சென்றதால் அதிலிருந்து ஏற்பட்ட தீ அறைமுழுவதும் பரவியது. இரவு 8.30 மணியளவில் குடோனில் இருந்து தீ வெளியே மளமளவென எரிந்ததை பார்த்த அப்பகுதி மக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து வந்து இரவு 12 மணிவரை போராடி தீயை அணைத்தனர். குடோன் அமைந்துள்ள மேல்தளத்தில் வங்கி, ஜெராக்ஸ் அலுவலகம், கம்ப்யூட்டர் சென்டர் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்கள் உள்ளன.

தீவிபத்து மேலும் பரவாமல் தவிர்க்கப்பட்டதால் பெரும் சேதம் தடுக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து ஒட்டன்சத்திரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.