பல்லடம்:
காங்கயம் எம்.எல்.ஏ. தனியரசு நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் மதவாத சக்திகள் நேரடியாக காலூன்ற முடியாது. பாஜகவின் சதி வலையில் ஈ.பி.எஸ்யும், ஓ.பி.எஸ்.யும் விழுந்து விட்டனர். அதிமுகவை விட்டு பிரிந்து சென்ற ஓ.பி.எஸ். மீண்டும் இணைந்ததால் தான் தற்போது தமிழக ஆட்சியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. அவர் இணையாமல் இருந்து இருந்தால் ஆட்சி சுமூகமான முறையில் சென்று இருக்கும்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிருடன் இருக்கும் வரை எதற்காகவும் தனது மதசார்பின்மை கொள்கை,தைரியத்தை யாரிடமும் அடகு வைக்கவில்லை. தமிழகத்தின் உரிமையை நிலை நாட்ட சட்டப்படி அனுகியே வெற்றி பெற்றார்.தனது நீதிமன்ற வழக்கு விசாரணைக்கு கூட மத்திய அரசின் உதவியை அவர் அனுகவில்லை.
அதனால் தான் தமிழக மக்கள் போற்றும் தலைவராக ஜெயலலிதா விளங்கினார். அவரது வழியில் தான் அதிமுக அரசும் செயல்பட வேண்டும். முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பி.பன்னீர்செல்வமும் தங்களது கவுரவத்தை பார்க்காமல் கட்சியையும், ஆட்சியையும் சுமூகமான முறையில் நடத்திட துணை பொதுச்செயலாளர் தினகரன், திவாகரன் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்திட வேண்டும். சபாநாயகர் தனபால் அனுபவம்மிக்கவர் அவர் முதல்வர் ஆனால் வரவேற்போம்.அதே சமயம் அதிமுகவை பொறுத்த வரையில் அடிமட்ட தொண்டன் கூட எம்.எல்.ஏ.ஆக முடியும்.
அதேபோல் யார் வேண்டுமானாலும் முதல்வர் ஆக முடியும். ஆட்சி நிர்வாக ரீதியாக மத்திய அரசை அனுகலாம். அதே சமயம் ஆட்சியை காப்பாற்ற மத்திய பாஜக அரசை அனுக கூடாது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா உருவாக்கி தந்த இந்த ஆட்சி கவிழ நாங்கள் ( தனியரசு. கருணாஸ், தமிமுன் அன்சாரி )காரணமாக இருக்க மாட்டோம்.
தமிழக மக்களின் உரிமையை காப்பாற்ற ஆட்சியை இழப்பதில் தவறில்லை, அணி அரசியலால் ஜெயலலிதா உருவாக்கி தந்த ஆட்சி கவிழ நாங்கள் துணை போக மாட்டோம். அதிமுகவில் அணி அரசியல் இல்லா ஒற்றுமையை ஏற்படுத்தவும் ஈ.பி.எஸ்,ஓ.பி.எஸ், தினகரன் ஆகியோர் ஒன்று சேர முயற்சி செய்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.