செய்திகள்

ஆர்.கே.நகரில் 11-ந்தேதி எதிர்க்கட்சி தலைவர்கள் ஒரே மேடையில் பிரசாரம்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் மருது கணேசை ஆதரித்து வருகிற 11-ந் தேதி மு.க.ஸ்டாலின், திருநாவுக்கரசகர் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் ஒரே மேடையில் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்கள்.

மாலை மலர்

சென்னை:

ஆர்.கே.நகர் தொகுதிக்கு வருகிற 21-ந்தேதி இடைத் தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் தி.மு.க. வேட்பாளராக மருதுகணேஷ் போட்டியிடுகிறார்.

இந்த தேர்தலில் தி.மு.க.வுக்கு காங்கிரஸ், ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், மனித நேயமக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், பெருந்தலைவர் மக்கள் கட்சி, சமத்துவ மக்கள் கழகம், கொங்குநாடு தேசிய மக்கள் கட்சி, அகில இந்திய பார்வர்டு பிளாக் ஆகிய 11 கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து எதிர்க்கட்சி தலைவர்கள் பிரசாரத்திலும் ஈடுபடுகிறார்கள். இந்த நிலையில் தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக எதிர்க் கட்சி தலைவர்கள் ஒரே மேடையில் பிரசாரம் செய்ய உள்ளனர்.

இதற்காக வருகிற 11-ந் தேதி (திங்கட்கிழமை) மாலை 5 மணிக்கு தண்டையார்பேட்டை சேனியம்மன் கோவில் தெரு, வ.உ.சி. நகர் சந்திப்பில் மாபெரும் பிரசார பொதுக்கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.

கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், கொங்குநாடு தேசிய மக்கள் கட்சி தலைவர் ஈஸ்வரன், எம்.ஜி.ஆர். கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன், சுபவீரபாண்டியன், பொன் குமார், எஸ்றா.சற்குணம், அதியமான், கு.செல்லமுத்து, திருப்பூர் சுல்தாப், டாக்டர். சேதுராமன், பி.வி.கதிரவன், அம்மாவாசி, பஷீர் அகமது, இனிகோ இருதயராஜ் ஆகி யோர் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.

பொதுக் கூட்டத்துக்கான ஏற்பாடுகளை மாவட்ட செயலாளர்கள் பி.கே.சேகர் பாபு, மாதவரம் சுதர்சனம் செய்துள்ளனர்.