சந்திரசேகரன் 
செய்திகள்

ரெயிலில் பெண்ணிடம் சில்மி‌ஷம் செய்து கைதான ஊட்டி சப்-இன்ஸ்பெக்டர் சஸ்பெண்டு ஆகிறார்

நீலகிரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் விமானப்படை ஊழியர் மனைவியிடம் சில்மி‌ஷத்தில் ஈடுபட்ட ஊட்டி சப்-இன்ஸ்பெக்டர் சஸ்பெண்டு செய்யப்படுகிறார்.

மாலை மலர்

ஊட்டி:

விருதுநகரை சேர்ந்தவர் சந்திரசேகரன் (57). இவர் ஊட்டியில் கடந்த 7 ஆண்டுகளாக சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். அங்குள்ள குடியிருப்பில் வசித்து வருகிறார்.

இவர் பணி நிமித்தமாக சென்னை சென்றார். பணி முடிந்து சம்பவத்தன்று இரவு நீலகிரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஊருக்கு புறப்பட்டார். அவர் ஏ.சி. பெட்டியில் பயணம் செய்தார்.

இவரது இருக்கைக்கு எதிரில் உள்ள இருக்கையில் கோவையில் உள்ள விமானப்படை முகாமில் ஊழியராக வேலைபார்த்து வருபவரும், அவரது இளம் மனைவியும் பயணம் செய்தனர். விமானப்படை ஊழியர் தனது மனைவியை கீழ் படுக்கையில் படுக்க வைத்து விட்டு மேல் படுக்கையில் அவர் படுத்து இருந்தார்.

ரெயில் சேலம் அருகே வந்து கொண்டு இருந்த போது சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் அப்பெண்ணிடம் சில்மி‌ஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் சத்தம் போட்டார். இதனை கேட்டதும் மேல் படுக்கையில் படுத்து இருந்த கணவர் கீழே இறங்கி வந்தார். பெண்ணிடம் சில்மி‌ஷம் செய்தது குறித்து ரெயிலில் இருந்த டிக்கெட் பரிசோதகரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் ரெயில் ஈரோடு வந்தது. ரெயிலில் இருந்து விமானப்படை ஊழியரும், அவரது மனைவியும் இறங்கி ஈரோடு ரெயில்வே போலீசில் புகார் செய்தனர். இதனை தொடர்ந்து சில்மி‌ஷத்தில் ஈடுபட்ட சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரனை போலீசார் கைது செய்தனர்.

இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணை முடிவில் சப்-இன்ஸ்பெக்டர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. அவர் சஸ்பெண்டு செய்யப்படுவார் என தெரிகிறது. #Tamilnews