செய்திகள்

ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் வெங்காய விலை கடும் வீழ்ச்சி

ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் வெங்காய விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது.

ஒட்டன்சத்திரம்:

ஒட்டன்சத்திரம் மார்க்கெட் தென்தமிழகத்தின் பெரிய மார்க்கெட்டாக உள்ளது. பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் காய்கறிகளை கொள்முதல் செய்து வருகின்றனர்.

குறிப்பாக 60 சதவீத காய்கறிகள் கேரளாவிற்கு அனுப்பி வைக்கப்படுகிறது. ஒட்டன்சத்திரம், இடைய கோட்டை, அம்பிளிக்கை, கள்ளிமந்தயம், மூலச்சத்திரம், கேதையெறும்பு மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் ஏராளமான ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் வெங்காய சாகுபடி செய்து வருகின்றனர்.

இந்த வருடம் பருவமழை ஓரளவு கைகொடுத்ததால் ஆர்வமுடன் வெங்காயம் பயிரிட்டனர். தற்போது ஆடி மாதத்திற்கு அவை அனைத்தும் அறுவடையாகி வருகிறது. இதனால் மார்க்கெட்டுக்கு 60 கிலோ கொண்ட பை 5 ஆயிரம் வந்துள்ளது.

அதிக அளவு வெங்காய வரத்து உள்ளதால் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. ஒரு கிலோ ரூ.10-ல் இருந்து ரூ.20 வரை மட்டுமே விலை கேட்கப்படுவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கடந்த 4 வருடங்களாக வறட்சியின் காரணமாக நஷ்டத்தை சந்தித்து வந்தனர்.

இந்த ஆண்டு காய்கறிகள் வரத்து அதிகரித்தும் விலை கிடைக்கவில்லை. மற்ற காய்கறிகளின் விலையும் குறைவாகவே உள்ளதால் விவசாயிகள் விரக்தி அடைந்துள்ளனர். இதனால் பெரும் அளவு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். எனவே அரசு தங்களுக்கு நிவாரண தொகை வழங்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.