செய்திகள்

திருவாரூர் அருகே ஓ.என்.ஜி.சி நிறுவன குழாய் உடைந்து எண்ணை கசிவு

திருவாரூர் அருகே எருக்காட்டூரில் ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் எண்ணை குழாய் உடைந்து எண்ணெய் கசிவு ஏற்பட்டதால் அச்சம் அடைந்த அப்பகுதி கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். #ongc #oilleak

மாலை மலர்

திருவாரூர்:

திருவாரூர் மாவட்டத்தில் ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் சார்பில் எண்ணை மற்றும் எரிவாயுவை கொண்டு செல்ல பல்வேறு கிராமங்களின் வழியாக குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழாய்களில் அவ்வப்போது உடைப்பு ஏற்பட்டு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் எண்ணை கசிவு ஏற்பட்டு வயலில் ஓடுவதால் விவசாயம் மற்றும் நிலத்தடி குடிநீர் பாதிக்கப்படுவதாக கூறி அப்பகுதி மக்கள் ஓ.என்.ஜி.சி நிறுவனத்தை வெளியேறக் கூறி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று காலை திருவாரூர் அருகே எருக்காட்டூர் கிராமத்தில் பூமிக்கடியில் தனசேகரன் என்பவரது வயலில் அமைக்கப்பட்டிருந்த குழாய் உடைந்து எண்ணை கசிவு ஏற்பட்டது. இதனால் அவரது வயலில் எண்ணை கொப்பளித்து பரவ தொடங்கியது. இதுகுறித்து கிராம மக்களிடையே தகவல் பரவியது. இதனால் வழக்கம்போல் அச்சத்துடன் எண்ணை கசிவு நடந்த இடத்துக்கு வந்து பார்வையிட்ட மக்கள் ஆவேசமடைந்தனர்.

இதையடுத்து குளிக்கரை, கமலாபுரம் உள்ளிட்ட சுமார் 5 கிராமங்களை சேர்ந்த கிராம மக்கள் ஓ.என்.ஜி.சி நிறுவனத்தை கண்டித்தும், உடனடியாக பணிகளை நிறுத்தக் கோரியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து திருவாரூர் மாவட்ட போலீசார் அங்கு சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. #tamilnews #ongc #oilleak