செய்திகள்

வேலூர் அருகே கம்பத்தில் ஏறிய மின் ஊழியர் மின்சாரம் தாக்கி பலி

வேலூர் அருகே மின் கம்பத்தில் ஏறி சீரமைப்பு பணியில் ஈடுபட்ட மின் ஊழியர் மின்சாரம் தாக்கி இறந்தார்.

மாலை மலர்

வேலூர்:

வேலூர் தாலுகா நாகநதி கிராமம் மேற்கு கொல்லைமேடு பகுதியை சேர்ந்தவர் துரை (வயது 41). பாகாயம் மின் வாரியத்தில் பணியாற்றி வந்தார். இன்று காலை அவரது வீட்டின் அருகே இருந்த மின் கம்பத்தில் ஒயர்கள் துண்டிக்கபட்டிருந்தது. இதனை சீரமைக்க அப்பகுதியில் வேலைபார்க்கும் மின் ஊழியர் சேட்டு என்பவர் வந்தார்.

அவர் துரையை அழைத்து கம்பத்தில் ஏறி சீரமைக்க கூறினார். சாத்துமதுரைக்கு போனில் மின்சாரத்தை துண்டிக்க கூறினார். அவர்களும் மின்சாரத்தை துண்டித்து விட்டார்கள் தைரியமாக ஏறு என தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து துரை மின் கம்பத்தில் மின்சார ஓயரை சீரமைக்க முயன்றார். அப்போது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். தரையில் விழுந்த அவர் துடிதுடித்து இறந்தார்.

வேலூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்கு அனுப்பினர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.