செய்திகள்

கஜா புயல் நிவாரணத்துக்கு போக்குவரத்து ஊழியர்கள் ஒரு நாள் சம்பளம் - ரூ.13 கோடியே 15 லட்சம் வழங்கப்பட்டது

கஜா புயல் நிவாரணம் மற்றும் சீரமைப்பு பணிகளுக்காக போக்குவரத்துத்துறை ஊழியர்களின் ஒரு நாள் சம்பளத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழங்கினார். #GajaStorm #EdappadiPalanisamy

மாலை மலர்

சென்னை தலைமை செயலகத்தில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேற்று சந்தித்தார். அப்போது, கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு, நிவாரணம் மற்றும் சீரமைப்பு பணிகளுக்காக தமிழ்நாடு அரசின் 8 போக்குவரத்து கழகங்கள் மற்றும் சாலை போக்குவரத்து நிறுவனங்களின் பணியாளர்களின் ஒரு நாள் சம்பளத் தொகையான 13 கோடியே 15 லட்சத்து 23 ஆயிரத்து 395 ரூபாய்க்கான காசோலையை முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்காக எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கினார். இந்த சந்திப்பின் போது, தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், போக்குவரத்துத்துறை முதன்மை செயலாளர் (முழு கூடுதல் பொறுப்பு) ஹர்மந்தர் சிங் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதே போன்று, அப்பல்லோ மருத்துவமனைகளின் செயல் துணைத் தலைவர் டாக்டர் ப்ரீதா ரெட்டி, அவரது கணவர் விஜயகுமார் ரெட்டி மற்றும் மகன் கார்த்திக் ரெட்டி ஆகியோரும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து 1 கோடி ரூபாய்க்கான காசோலையை முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்காக வழங்கினர். அப்போது, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும், சுப்ரீம் கோர்ட்டு பார் அசோசியேஷன் செயலாளர் விக்ரந்த் யாதவ் மற்றும் அரசு தலைமை வக்கீல் விஜய் நாராயண் ஆகியோர் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து 74 லட்சத்து 62 ஆயிரத்து 221 ரூபாய்க்கான காசோலையை சுப்ரீம் கோர்ட்டு பார் அசோசியேஷன் சார்பில் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கினர். அவர்களுடன் வக்கீல்கள் ஆர்.பாலசுப்பிரமணியா, சி.பரமசிவம், வினோத் கன்னா, சியாமளா ஆகியோர் உடன் வந்திருந்தனர்.