செய்திகள்

தமிழக அரசு பற்றி நாராயணசாமி தவறான தகவல்களை பரப்புகிறார்- ஓம்சக்தி சேகர் குற்றச்சாட்டு

தமிழக அரசு பற்றி முதல்- அமைச்சர் நாராயணசாமி தவறான தகவல்களை பரப்புகிறார் என்று முன்னாள் எல்எல்ஏ ஓம்சக்தி சேகர் குற்றம் சாட்டியுள்ளார். #narayanasamy

புதுச்சேரி:

முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்தி சேகர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழக அரசு தூர் வாராததால் காரைக்கால் கடைமடைக்கு காவிரிநீர் வர தாமதம் ஏற்பட்டுள்ளதாக ஒரு வடிகட்டிய பொய்யை நாராயணசாமி தெரிவித்துள்ளதற்கு எனது கண்டனத்தை பதிவு செய்கிறேன்.

காவிரி நீருக்காக தனது வாழ்நாள் முழுவதும் போராடிய உண்மையான மக்கள் தலைவியாக விளங்கிய அம்மாவின் எண்ணப்படி சிறப்பான முறையில் செயல்படும் தமிழக அரசின் செயல்பாட்டை பொறுத்துக் கொள்ள முடியாமல் தி.மு.க. செயல் தலைவரின் கருத்தை புதுவையில் வழிமொழியும் தி.மு.க. செய்தி தொடர்பாளர் போல் நாராயணசாமி செயல்பட்டு வருகிறார்.

நாராயணசாமி தனது பதவியை காப்பாற்ற தமிழக அரசை குறை கூறுவதன் மூலம் தி.மு.க.வை சந்தோஷப்படுத்த முயற்சிக்கிறார்.

முதலில் தனது நெல்லித்தோப்பு தொகுதியில் உள்ள வாய்க்கால்களை மழை காலத்துக்கு முன்பு தூர்வாரி விட்டு பிறகு மற்ற மாநிலங்களை பற்றி பேச வேண்டும்.

இதுபோன்று பல குறைகளை தன்னிடம் வைத்துக்கொண்டுள்ள நாராயணசாமி அ.தி.மு.க. அரசை விமர்சிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும். இல்லையெனில் கட்சி தலைமையின் அனுமதி பெற்று போராட்டம் நடத்துவோம்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT